டெல்லி : அமலாக்கத்துறை கஸ்டடியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது இரண்டாவது உத்தரவை பிறப்பித்துள்ளார். டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய்சிங், தெலங்கானா எம்எல்சி கவிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து, தங்களது கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் அவர் அமலாக்கத் துறை காவலில் இருந்தபடி கடந்த ஞாயிற்று கிழமையன்று, தனது முதல் உத்தரவை வெளியிட்டார். இந்த உத்தரவானது, குடிநீர் அமைச்சகத்துடன் தொடர்புடையது என்று அமைச்சர் அதிஷி கூறினார்.
இதற்கிடையே இன்று 2வது முறையாக மற்றொரு உத்தரவை அமலாக்கத்துறை கஸ்டடியில் இருந்து கெஜ்ரிவால் பிறப்பித்து உள்ளார். இதுகுறித்து டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வெளியிட்ட செய்தியில், ‘டெல்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனப்படும் மொகல்லா கிளினிக்குகளை நம்பியே உள்ளனர். ஆனால், சில மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகளிலும் இலவச மருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என என்னிடம் கேட்டு கொண்டார். எனவே போர்க்கால அடிப்படையில் அவரது உத்தரவின் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.