பெரம்பூர்: தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், கொடுங்கையூர் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால மக்கள் விரோத ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை செய்து வைத்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு சமையல் கலை முன்னேற்ற தொழிலாளர் சங்கம் சார்பில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் உலக வங்கியில் இருந்த கருப்பு பணத்தை மீட்டு எடுப்போம், பெட்ரோல் விலையை குறைப்போம், வேலை வாய்ப்பை உருவாக்குவோம், ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் பொதுமக்களை மோடி அரசாங்கம் ஏமாற்றியதை விமர்சிக்கும் வகையில் மோடி சுட்ட வரை என்று ஐந்தரை அடி உயரத்துக்கு மாதிரி வடை செய்து வைத்துள்ளனர்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தங்களது முழு ஆதரவு தெரிவிக்கிறது என்று சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இனியவன் தெரிவித்துள்ளார்.