டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு சதித்திட்டமே பாஜகவால் தான் தீட்டப்பட்டது என டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பாஜக மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்குப் பிறகு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது ஆம் ஆத்மி தலைவர் சிங் ஆவார். இதே வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, டெல்லி கலால் ஊழல் தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் சிங்குக்குஅமலாக்க இயக்குனரகம் (ED) எதிர்ப்புத் தெரிவிக்காததால், உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 2 ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு சதித்திட்டமே பாஜகவால் தான் தீட்டப்பட்டது என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் பாஜக மீது பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் மதுபானக் கொள்கை முறைகேடு சதியில் சம்பந்தப்பட்டுள்ளதாக சஞ்சய் சிங் புகார் தெரிவித்தார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்ய தீட்டப்பட்ட சதியை அம்பலப்படுத்தப் போவதாகவும் சஞ்சய் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.