புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, மீனவ வாக்காளர்களிடையே வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, 19.4.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி பல்வேறு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுகள் வாக்களர்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வாக்காளர்களிடையே தேர்தல் தொடர்பாக பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில், மீனவ வாக்காளர்களிடையே, வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மெர்சி ரம்யா பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1560 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 35 ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,45,361 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 1,13,582 ஆண் வாக்காளர்களும், 1,15,667 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் என மொத்தம் 2,29,250 வாக்காளர்கள் உள்ளனர்.
எனவே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்வுகளில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை).பஞ்சராஜா, வட்டாட்சியர்.ஷேக் அப்துல்லா, மண்டல துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.