மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் நடைபெற்றது. மேலும் உற்சவர் அம்மனுக்கு 2 லட்சத்து 51 ஆயிரம் வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்பு கோயில் பூசாரிகள் அம்மனுக்கு தீபாராதனை காண்பித்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடிப்பூர திருநாளில் அம்மனின் அருளை பெற்று சென்றனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் செந்தில்குமார், மேலாளர் மணி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.