Wednesday, May 22, 2024
Home » வில்லிவாக்கத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதல் கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் பலி: உடன் பயணித்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை

வில்லிவாக்கத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதல் கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் பலி: உடன் பயணித்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை

by Ranjith

சென்னை: வில்லிவாக்கம் புதிய ஆவடி சாலை திருநகர் சந்திப்பு அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உள்பட இருவர் பரிதாபமாக பலியாகினர். மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை வில்லிவாக்கம் புதிய ஆவடி சாலை திருநகர் சந்திப்பு அருகில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இரண்டு பைக்கள் நேருக்கு நேராக பயங்கரமாக மோதி கொண்டன. இதனால், எழுந்த பெரிய அளவிலான சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்த்தனர். அதில், இரண்டு பைக்கில் வந்த 4 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தனர்.

இதுபற்றி திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது விபத்தில் சிக்கியவர்களில் இருவர் உயிரிழந்து கிடந்தனர். மேலும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த இருவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த ஹார்ஸ் (20), அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தது தெரிந்தது. இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த தருண் (23), செல்போன் கடை வைத்துள்ளார். இருவரும் சென்னை ராயப்பேட்டையில் தசரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர், வீட்டிற்கு பைக்கில் திரும்பி உள்ளனர். இதேபோல், சென்னை வில்லிவாக்கம் எம்பா நாயுடு 1வது தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (20), இவர் அதே பகுதியில் உள்ள மெடிக்கலில் பணியாற்றி உள்ளார்.

இவரது நண்பரான பழனிவேல் (20), முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வில்லிவாக்கம் புதிய ஆவடி திருநகர் சந்திப்பு அருகே இரண்டு பைக்குகளும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஜெயபிரகாஷ் மற்றும் ஹார்ஸ் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியாகி உள்ளனர். பைக் பின்னால் அமர்ந்து வந்த தருண் மற்றும் பழனிவேல் ஆகிய இருவரும் கை, கால், கண் மற்றும் உடலின் பல பகுதிகளில் படுகாயம் அடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eleven − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi