சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி ‘டி3’ படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்ட பட இயக்குநருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட இயக்குநர் பாலாஜிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தார். நடிகர் பிரஜன் நடிப்பில் ‘டி3’ என்ற பெயரில் படம் தயாரிக்க சாமுவேல் காட்சனிடம் தயாரிப்பாளர் மனோஜ் ரூ.4 கோடி பெற்றார். படத்தின் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுக்கு தருவதாக தயாரிப்பாளர் மனோஜ் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட்டதாக சாமுவேல் தொடர்ந்த வழக்கில் ‘டி3’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது. படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உத்தரவை மீறி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டதாக, இயக்குநர் பாலாஜி, தயாரிப்பாளர் மனோஜுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டதை அடுத்து பாலாஜிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.