Thursday, May 16, 2024
Home » மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை

by Suresh

சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட MSME நிறுவனங்களுக்கு உதவிட வங்கியாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் இன்று (14.12.2023) கிண்டி, சிட்கோ தலைமை அலுவலகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த MSME நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் வங்கியாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது –

நாட்டின் பொருளாதாரம், சமச்சீர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள். முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம், தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி (TN-Treds) தளம், குறுங்குழும மேம்பாட்டுத் திட்டம், பெருங்குழுமத்திட்டம் அடுக்குமாடி தொழிற்கூடங்கள், பணியாளர்கள் தங்கும் விடுதி, சிட்கோ தொழில் மனை விலைக் குறைத்தல் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

கழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான நிதியினை 2021-22 ஆம் நிதி ஆண்டில் ரூ. 741.96 கோடியும்,2022-23 ஆம் நிதி ஆண்டில் ரூ. 1025.10 கோடியும், 2023-24 ஆம் நிதி ஆண்டில் ரூ. 1502.11 கோடியாகவும் உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக இம்மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் பெய்த கனமழையினால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் பல பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகி உள்ளன என்பதால் 09.12.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் , ஒன்றிய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சரு கு பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதனக்கடன், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட உதவிகளை வழங்கிடவும், காப்பீட்டு நிறுவனங்கள் விரைந்து ஆய்வு மேற்கொண்டு காப்பீட்டுத் தொகையை வழங்கிடவும் கடிதம் எழுதியுள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது வங்கியாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் கூட்டம் நடைபெறுகிறது. வங்கியாளர்கள் விரைவாக MSME நிறுவனங்களுக்கு மிகைப்பற்று (Over Draft) மற்றும் கடன் உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். காப்பீட்டு நிறுவனத்தினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள MSME நிறுவனங்களின் இயந்திரங்கள், மூலப் பொருட்கள், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றிற்கான காப்பீட்டு தொகையினை விரைந்து வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இழப்பீடுகளை விரைந்து மதிப்பீடு செய்ய ஏதுவாக, வெளி மாவட்டங்களிலிருந்து மதிப்பீட்டாளர்களை வரவழைத்து, பாதிப்புகள் குறித்த விவரத்தினை விரைந்து மதிப்பீடு செய்து, இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இக்கூட்டத்தில் MSME துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக ஆணையர் நிர்மல் ராஜ், கூடுதல் தொழில் வணிக ஆணையர் கிரேஸ் பச்சோவ், கூடுதல் தொழில் வணிக இயக்குநர் சே.மருதப்பன், ஏகாம்பரம், வங்கியாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi