சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள சேடப்பட்டியை சேர்ந்தவர் பசுவராஜ் (38). இவரது மனைவி செல்வி (28). கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற செல்வி, மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் தாரமங்கலம் போலீசில், தனது மனைவியை காணவில்லை என பசுவராஜ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை, சேலம் இரும்பாலை பெருமாம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகே முட்புதரில் செல்வி சடலமாக கிடந்தார். உடல் அழுகி காணப்பட்டது. தொடர் விசாரணையில் அவரை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலின் பூசாரியான குமார் (42) கொலை செய்து வீசியிருப்பது தெரியவந்தது. பூசாரி குமாரை கைது செய்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதுபற்றி போலீசார் கூறியதாவது: பசுவராஜ்-செல்வி தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து இறந்துள்ளது. செல்வி, தனது வீட்டில் இருந்தபடி டிக்-டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஏராளமான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். தனக்கு பிறந்த 2 குழந்தைகளும் இறந்ததால், பெருமாம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் குறி கேட்டால், அடுத்து குழந்தை பாக்கியம் இருக்கிறதா? என தெரியவரும் என அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர்.
இதனால், கடந்த சில மாதங்களாக பெருமாம்பட்டிக்கு குறி கேட்க செல்வி வந்துள்ளார். அப்போது பூசாரி குமார் குறி சொன்னதோடு, அவரோடு நெருக்கமாக பழகியுள்ளார். பூசாரி அழைக்கும்போதெல்லாம் கோயிலுக்கும் வந்து சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் செல்விக்கு ₹30 ஆயிரம் பணமும் பூசாரி கொடுத்துள்ளார்.
கடந்த 15ம் தேதியன்று செல்விக்கு போன் செய்து பூசாரி குமார் அழைத்துள்ளார். அதனால், கோயிலுக்கு வந்துள்ளார். பிறகு அருகில் உள்ள பூசாரியின் வீட்டிற்கு செல்வி சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, தான் கொடுத்த ₹30 ஆயிரம் பணத்தை கேட்டிருக்கிறார். அவர் பணத்தை தற்போது தர முடியாது என கூறியதால், அணிந்திருக்கும் நகையை எடுத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு, குளிர்பானத்தில் சயனைடு கலந்துகொடுத்து செல்வியை கொலை செய்துள்ளார்.
பின்னர், அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை எடுத்துக் கொண்டு, சடலத்தை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி போட்டுவிட்டு, அங்கிருந்துச் சென்றுள்ளார், என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.செல்வியை கொலை செய்த நாளிலும், மற்றொரு பெண்ணை ஏற்காட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், பூசாரி குமாரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.