திருவனந்தபுரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் சச்சின் சாவந்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகை நவ்யா நாயரிடம் மத்திய அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.
லக்னோவில் சுங்கத்துறை கூடுதல் ஆணையராக இருந்தவர் சச்சின் சாவந்த். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கடந்த ஜூன் மாதம் இவரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இவரது செல்போனை பரிசோதித்ததில் பிரபல மலையாள நடிகை நவ்யா நாயருடன் இவருக்கு நெருக்கமாக இருந்தது தெரியவந்தது. நவ்யா நாரை பார்ப்பதற்காக பலமுறை இவர் கொச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு நகைகள் உள்பட விலை மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததும் தெரியவந்தது. இந்நிலையில் நடிகை நவ்யா நாயரிடம் நேற்று மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினர். மும்பையிலுள்ள நவ்யா நாயரின் வீட்டில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றது. சச்சின் சாவந்தை தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அவருடன் நெருக்கம் எதுவும் கிடையாது என்றும் நவ்யா நாயர் கூறினார்.