Monday, May 13, 2024
Home » சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்தி ராஜஸ்தான் முதலிடம் பவர் பிளேவில் அதிக ரன் கொடுத்ததால் தோல்வி: கேப்டன் டோனி பேட்டி

சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்தி ராஜஸ்தான் முதலிடம் பவர் பிளேவில் அதிக ரன் கொடுத்ததால் தோல்வி: கேப்டன் டோனி பேட்டி

by Suresh

ஜெய்ப்பூர்:16வது ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த 37வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 43 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன் விளாசினார். துருவ் ஜூரல் 34 (15 பந்து), பட்லர், படிக்கல் தலா 27 ரன் எடுத்தனர். சென்னை பவுலிங்கில் தேஷ்பாண்டே 2, ஜடேஜா, மகேஷ் தீக்சனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில் கான்வே 8, ரகானே 15 ரன்னில் வெளியேற ருதுராஜ் கெய்க்வாட் 47 ரன் (29 பந்து) எடுத்தார். பின்னர் வந்த அம்பதிராயுடு டக்அவுட் ஆக மொயின் அலி 23 ரன் (12பந்து) அடித்து வெளியேறினார். கடைசி பந்தில் ஷிவம் துபே 52 ரன் (33 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 20 ஓவரில் சென்னை 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களே எடுத்தது. இதனால் 32 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. ஜடேஜா 23 ரன்னில் நாட்அவுட்டாக இருந்தார். ராஜஸ்தான் பவுலிங்கில் ஆடம் ஜம்பா 3, அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதுபெற்றார். 8வது போட்டியில் 5வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. சென்னை முதல் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. நடப்பு சீசனில் சேப்பாக்கத்தில் ஏற்கனவே சிஎஸ்கேவை வீழ்த்தி இருந்த நிலையில் நேற்று 2வது முறையாக வென்று ராஜஸ்தான் அசத்தியது. தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியதாவது:-

இந்த ஆடுகளத்தில் எட்டக்கூடிய இலக்கை விட ராஜஸ்தான் கூடுதலாக ரன்கள் குவித்துவிட்டது. பவர் பிளேவில் அதிகமான ரன் விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதனால் பந்துவீச்சாளர்களை குறை சொல்லிவிட முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. ராஜஸ்தான் வீரர்கள் அடித்த சில தவறான ஷாட்கள் கூட பவுண்டரி செல்லும் அளவிற்கே ஆடுகளம் இருந்தது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பதிரானா இந்த போட்டியில் அதிகமான ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தாலும், என்னை பொறுத்தவரையில் அவர் மிக சிறப்பாகவே பந்துவீசினார்.

ஸ்கோர் கார்டை பார்க்கும் பொழுது வேண்டுமானால் பதிரானா பந்துவீச்சில் சொதப்பியதாக தோன்றலாம். ஆனால் பதிரானா சிறப்பாக பந்துவீசினார் என்பதே உண்மை. எங்களால் பவர் பிளேவில் நல்ல தொடக்கத்தைப் பெற முடியவில்லை. ஜெய்ஸ்வால் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். இது எனக்கு மிகவும் சிறப்பான ஒரு மைதானம். விசாகப்பட்டினத்தில் எனக்கு முதல் ஒருநாள் போட்டி சதம் வந்தது. அது எனக்கு மேலும் விளையாட 10 போட்டிகளை தந்தது. ஆனால் நான் இங்கு அடித்த 183 ரன் எனக்கு மேலும் ஒரு வருடத்தை தந்தது. மீண்டும் இங்கு வந்தது நன்றாக இருந்தது”என்றார்.

ஜெய்ஸ்வால் ஆடும் விதம் பெருமையாக உள்ளது: வெற்றிக்கு பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது: இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது அணியின் சூழ்நிலைக்கும் ரசிகர்களுக்கும் தேவைப்பட்டது, ஜெய்ப்பூரில் எங்கள் முதல் வெற்றியும் கூட. சின்னசாமி அல்லது வான்கடேவில் விளையாடினால், சேசிங்கை தேர்வு செய்திருப்போம். ஆனால் இங்குள்ள சூழ்நிலைகளைப் பார்த்து, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தோம். இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் படிக்கல் மற்றும் ஜுரல் ஆகியோர் பேட்டிங் செய்த விதம் மிகச் சிறப்பாக இருந்தது. அட்டாக் அட்டாக் என்று அட்டாக் செய்ய நாங்கள் ட்ரெஸ்சிங் ரூமில் ஊக்குவிப்போம். ஜெய்ஸ்வால் வெற்றிக்குப் பின்னால் கடினமான மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. அவர் விளையாடும் விதம் பெருமையாக இருக்கிறது’’ என்றார்.

அழுத்தத்தை என்ஜாய் செய்கிறேன்: ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் கூறுகையில் “நான் பந்தை அடித்து விளையாட முயற்சி செய்தேன். டோனி சார், விராட் பாய் போன்ற சீனியர் வீரர்களிடம் தொடர்ந்து பேசுகிறேன். நான் அழுத்தத்தை என்ஜாய் செய்கிறேன். அழுத்தம் இருக்கும் பொழுது களத்தில் இருக்க விரும்புகிறேன். எனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். இந்த விக்கெட்டில் தற்காத்துக் கொள்ள 200 ரன் தேவை என்பது எனக்குத் தெரியும்’’ என்றார்.

You may also like

Leave a Comment

one + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi