புதுடெல்லி: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் டி.சிவஞானசம்பந்தன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இரண்டில் போலீசாருக்கு அதிகப்படியான அதிகாரம் கொடுப்பதாக இருக்கிறது.
எனவே அதுகுறித்து உச்ச நீதிமன்றம் விரிவாக விசாரணை நடத்தி, ஒன்றிய சட்டத்துறை அமைச்சகத்திற்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.