பீஜிங்: உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் துவக்கப் புள்ளியான சீனாவிற்குள் நுழைவதற்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமில்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கடைசியில் இருந்து கொரோனா பரவல் காரணமாக சீனாவில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த கட்டுப்பாடுகளால் சீனாவின் பொருளாதாரம் பெருமளவு பாதித்தது. இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ‘நாளை (ஆகஸ்ட் 30) முதல் சீனாவுக்குள் நுழைவதற்கு கோவிட் – 19 பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமில்லை. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பயணிகள், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற அறிக்கையை காண்பிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை ரத்து செய்யப்படுகிறது’ என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் அறிவித்துள்ளார்.