Friday, May 17, 2024
Home » விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி செந்தில் பாலாஜியை இன்று ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி செந்தில் பாலாஜியை இன்று ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

by Ranjith

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை இன்று நேரில் ஆஜர்ப்படுத்த போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஜனவரி 22ல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை இன்று நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.

உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி மெமோ தாக்கல் செய்வதாகவும் அதனை ஏற்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மெமோவை பெற முதலில் மறுத்த நீதிபதி, இப்போது பெற்றுக்கொள்வதாகவும் அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

*ஆவணங்கள் திருத்தப்படவில்லை அமலாக்கத்துறை வாதம்
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று 2வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிடும்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பதவிக்கு ஏற்றவாறு 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் என மொத்தம் 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு மூன்று வழக்குகள் தொடர்ந்துள்ளது.

இதில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறபு நீதிமன்றத்தில் இருந்து அமலாக்கத் துறை பெற்றது. அவை திருத்தப்படவில்லை. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னமும் அவர் செல்வாக்கான நபராகவே உள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க கூடும். நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.  இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பின் பதில் வாதத்துக்காக விசாரணையை வரும் 19ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi