காஞ்சிபுரம்,: காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை என்று அமைப்புக்கு சொந்தமான நிலத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் உருவச்சிலையை சுத்தி மறைத்து அமைக்கப்பட்டுள்ள இரும்பு தகரங்களை உடனடியாக அகற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபத்தை எழுப்பிய தமிழ்நாடு யாதவ மகாசபை அங்கு சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் சிலையையும் அமைத்திருந்தது.
கடந்த ஜூலை 11ம் தேதி சிலை திறப்பு விழா நடைபெற இருந்தநிலையில் வருவாய் துறை அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்து சிலையை தகரம் கொண்டு மூடினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் தகர மறைப்பை அகற்றக்கோரியும் தமிழ்நாடு யாதவ மகாசபை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டப்படி உரிய அனுமதிகளை பெறாமல் சிலை அமைக்கப்பட்டு இருந்ததால் வருவாய் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, தனியார் தனியார் நிலத்தில் சுதந்திர போராட்ட வீரரின் சிலை அமைக்கும் மனுதாரரின் அடிப்படை உரிமையில் அரசு தலையிட முடியாது. சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தகர மறைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதை அதிகாரிகள் செயல்படுத்த தவறினால் சுதந்திர தினமான நாளை அந்த தகர மறைப்புகளை மனுதாரர்களே அகற்றிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.