வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியானது இந்து கோயிலுக்கு மேல் கட்டப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தை இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு உத்தரவிட்டது. மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி குழுவினர் தடை உத்தரவு பெற்றனர். மேலும்இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு மீண்டும் அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து நேற்று காலை மசூதி வளாகத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வை தொடங்கினார்கள். ஆனால் இதனை ஞானாவாபி குழுவினர் புறக்கணித்தனர். வெள்ளி சிறப்பு தொழுகையையொட்டி நேற்று 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆய்வை தொல்லியல் துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். இதற்கிடையே தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி அளித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க கோரி ஞானவாபி மசூதி கமிட்டி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வானது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.