சென்னை: வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: கிறிஸ்தவ சமூக பொருளாதாரக் கூட்டமைப்பினர் சென்னையில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றோம்.
தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கல்வியாளர்கள் மருத்துவத்துறையினர் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெருமக்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கு ஆணையிட்டது. காலைச்சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் கிறிஸ்துவ பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியது போன்ற திட்டங்களை நாங்கள் எடுத்துரைத்தோம்.
தேர்தல் பிரதிநிதித்துவம், கல்வி நிறுவனங்களுக்கான கூடுதல் திட்டங்கள் தொடர்பாக கிறிஸ்தவ சமூக பொருளாதார கூட்டமைப்பினர் கோரிக்கைகளை முன் வைத்தனர். கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு திமுக அரசு எப்போதும் அரணாக இருக்குமென்று உறுதி அளித்ததோடு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில், இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது என்று உரையாற்றினோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.