சென்னை: தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து அதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. தொழில் செய்யும் நிறுவனங்கள், சராசரி ஆண்டு முதலீட்டுக்கு ஏற்றார் போல், தொழில் வரியுடன் சேர்த்து நிறுமம் வரி செலுத்த வேண்டும். அதன்படி, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 2022ன் படி தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பாணையை சென்ைன மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ளது. அந்த அந்த அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கான நிறும வரியை மும்மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.100 முதல் ரூ.300 வரையும், அதிகபட்சமாக ரூ.1000 முதல் ரூ.3000 வரையும் நிறும வரி உயர்த்தப்படும்.
மேலும், ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அல்லது முதன்மை அலுவலகம் சென்னை மாநகரில் இல்லாமல் இருந்தாலும் முதல் ஆண்டிற்கு நிறுமம் வரி ரூ.75 செலுத்தப்பட வேண்டும். ஆனால் அந்நிறுவனத்தின் மொத்த வருமானம் அந்த ஆண்டில் ரூ.5000க்கு மிகையாக இருப்பதாக கண்டறியப்பட்டால் அந்நிறுனம் அட்டணையில் குறிப்பிடப்பட்ட விகிதத்தின் படி முதலில் செலுத்திய ரூ.75ஐ கழித்து மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும். எனவே, உயர்த்தப்பட்டுள்ள நிறும வரி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் 30 நாட்களுக்குள் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருத்திய நிறும வரி
முதலீடு தொகை உயர்த்தபடவுள்ள அரையாண்டு நிறும வரி
1,00,000-1,99,999 ரூ.300
2,00,000-2,99,999 ரூ.600
3,00,000-4,99,999 ரூ.1200
5,00,000-9,99,999 ரூ.1500
10,00,000-அதற்கு மேல் ரூ.3000