ஜெனீவா : கொரோனாவை விட மோசமான மற்றொரு பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் எச்சரித்துள்ளார். 2019ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2 கோடிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வாழ்வாதாரத்தை பறிகொடுத்த பலரது இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. கொரோனா பரவலில் இருந்து தப்பிப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஆபத்தில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன.
இதையடுத்து கோவிட் பெருந்தொற்று இனி உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம், கொரோனா பெருந்தொற்றை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு ஆபத்தான வைரஸ் தாக்கும் ஆபத்து உருவாகி வருவதாக எச்சரித்துள்ளார். அது கோவிட் வைரஸை அதிக உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான வைரஸாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்த அவர், அது பரவாமல் தடுக்க உலக நாடுகள் இப்போதே முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.