ஐதராபாத்: மறுசீரமைப்பு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி காரியக்கமிட்டி கூட்டம் ஐதராபாத்தில் நாளை நடக்க உள்ளது. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி மேலிடம் காரியக் கமிட்டியை மறு சீரமைப்பு செய்தது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த காரிய கமிட்டியில் 39 உறுப்பினர்களும், 32 நிரந்தர அழைப்பாளர்களும், 13 சிறப்பு அழைப்பாளர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் இன்றும், நாளையும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் 5 மாநில தேர்தலை எதிர்கொள்வது பற்றிய விரிவான விவாதங்கள் நடக்க உள்ளன. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்த ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது கட்ட நடைபயணம் குறித்து ஆலோசிக்க உள்ளனர். தெலங்கானா தேசிய ஒருங்கிணைப்பு தினமான நாளைய தினம் செப்டம்பர் 17 அன்று ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு மாபெரும் பேரணியை நடத்த உள்ளது. அப்போது தெலங்கானா தேர்தலுக்கான 5 முக்கியமான வாக்குறுதிகள் அறிவிக்கப்பட உள்ளது.