Friday, May 17, 2024
Home » காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்

காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்

by Lavanya

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கை இல்லை என்பதாலேயே பிரதமர் மோடி பாஜக தேர்தல் அறிக்கையை பற்றி பேசுவதில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நாட்டின் வளங்களில் பட்டியலினத்தோர், ஓபிசி, ஏழைகளுக்கு முதல் உரிமை உள்ளது என்று மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் பிரதமர் மோடி பேசியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேசிய வளர்ச்சி கவுன்சிலில் ஆற்றிய உரையிலும் இதையே கூறியதாக குறிப்பிட்டிருக்கும் சிதம்பரம் ஆனால் அந்த பட்டியலில் சிறுபான்மையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளை மன்மோகன் சிங் சேர்த்திருந்ததாக தெரிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி ஏன் சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகளை மறந்துவிட்டார் என கேள்வி எழுப்பியிருக்கும் ப.சிதம்பரம் நாட்டில் ஏழை சிறுபான்மையினர், ஏழை பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகளே இல்லையா என்று வினவியுள்ளார்.

தேசத்தின் வளங்களின் மீது ஏழைகளுக்கு முதல் உரிமை உண்டு என்பது தான் சரியான உருவாக்கம் என ப.சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார். நாடு வளர்ச்சி அடைந்தாலும் கணிசமான எண்ணிக்கையில் ஏழைகள் இருப்பதை காங்கிரஸ் உணர்ந்திருப்பதால் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு முக்கியத்துவம் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஏழைகளை உயர்த்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்தியாவில் உள்ள ஆபத்தான ஏற்றத்தாழ்வுகளை குறைக்கவும், கொள்கைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை வேலை, வளம், மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஏதும் இல்லை என்பதாலேயே பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையை பற்றி பேசுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் மறைந்து விட்டதாகவும். ஆனால் காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தி இருப்பதுடன் கோடிக்கணக்கான மக்களுடன் பேசுபொருளாக மாரி இருப்பதாகவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

12 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi