சென்னை: வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமானோர் தென் மாவட்டத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். இவர்களின் வசதிக்காக, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி வழியாக அதிக அளவிலான அரசு பேருந்துகள் செல்கின்றது. இதனால், இந்த சுங்கச்சாவடியில் பல மணி நேரம் பேருந்திற்காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும், கூட்ட நெரிசலால் பேருந்தில் ஆபத்தான முறையில் படியில் தொங்கியடி பயணம் செய்கின்றனர். தமிழக அரசு சார்பில், சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் போதிய இருக்கைகள் இல்லாமல், படியில் தொங்கியபடியே பயணம் மேற்கொள்வதே வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே தொடர் விடுமுறை தினங்களில் கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கும் அரசு பேருந்துகள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.