திருப்போரூர்: படூரில் ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும்போது, இணைப்பு சாலை அமைக்காததால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புறநகரான படூர் பகுதியில் வடகிழக்கு பருவ மழையின்போது, ஏரி உபரிநீர் ஓஎம்ஆர் சாலை வழியாக வெளியேறியது. கிராமப்புறத்தில் உள்ள மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஓஎம்ஆர் சாலையை மூழ்கடித்து வெள்ளநீர் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, சாலையும் சேதமடைந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் வடிகால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு படூர் தனியார் கல்லூரி அருகே தொடங்கப்பட்ட கால்வாய் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தற்ேபாது கால்வாய் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. இணைப்பு சாலை அமைக்கப்படாததால் காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓஎம்ஆர் சாலையில் ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் வரிசையாக செல்லும்போது இணைப்பு சாலை இல்லாததால் பள்ளத்தில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையும், நேற்று காலையும் வாகனங்கள் மேற்கண்ட இடத்தை கடப்பதற்கு மட்டும் 2 மணி நேரத்திற்கும் மேலானது. எனவே, நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இணைப்பு சாலை அமைத்து போக்குவரத்தை எளிமையாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.