பூந்தமல்லி: திருவேற்காட்டில், கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியிருந்தார். மேலும் அந்த மாநாட்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டிருந்தார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலக வலியுறுத்தியும் பாஜவினர் தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் அஸ்வின் தலைமையில் நேற்று திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக, திருவேற்காடு போலீசார் கோயில் அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பாஜவினரின் முற்றுகைப் போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து 100க்கும் மேற்பட்ட பாஜவினரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.