கொழும்பு: இந்திய ரூபாயை இலங்கையும் பொது கரன்சியாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கொழும்புவில் இந்திய சிஇஓக்கள் கூட்டமைப்பில் கலந்து கொண்டு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ‘‘இந்திய ரூபாய் இலங்கையிலும் பொது கரன்சியாக பயன்படுத்தினாலும் அதில் எங்களுக்கு எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை. அதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். உலகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த 75 ஆண்டுகளில் ஜப்பான், கொரியா, சீனா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. இப்போது இந்தியாவின் காலமாகும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகின்றது. அமெரிக்கா டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதை காண விரும்புகிறேன்” என்றார். அடுத்த வாரம் ரணில் இந்தியா வருகின்றார்.