போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வடபலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்குமார் (37). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு பூர்ணமி (30) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறால் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, பூர்ணமி குழந்தைகளுடன் கொடமாண்டப்பட்டியில் உள்ள தாய் அம்சவேணி வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் விமல்குமார் பல முறை அழைத்தும் பூர்ணமி வர மறுத்து விட்டார். இதையடுத்து, விமல்குமாருக்கு வேறு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
இந்நிலையில், கடைசி முயற்சியாக நேற்று முன்தினம், விமல்குமார் மற்றும் அவரது தாய் மகேஸ்வரி ஆகியோர், பூர்ணமியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தனர். அப்போது வாழ விருப்பம் இல்லாவிட்டால், விவாகரத்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பூர்ணமி, அம்சவேணி ஆகியோர், அங்கிருந்த கிரிக்கெட் மட்டையால் விமல்குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடந்த அவர் சிறிது நேரதில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், விமல்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போச்சம்பள்ளி போலீசார் பூர்ணமி, அம்சவேணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.