அம்பத்தூர்: செல்போனில் ஆபாச படம் காண்பித்து, 13 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன், கடந்த 8ம் தேதி ஐசிஎப் மைதானத்தில் கால்பந்து பயிற்சி முடித்துவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். திருமங்கலம் வழியாக சென்றபோது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், சிறுவனை வழி மறித்து, செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்த சிறுவன், வாலிபரை தள்ளிவிட்டுவிட்டு சைக்கிளில் வேகமாக சென்றபோது மீண்டும் அந்த வாலிபர் பைக்கில் விரட்டி சென்று சிறுவனை மடக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதனை தொடர்ந்து, சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின்படி, திருமங்கலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து, திருமங்கலம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் பதிவான பைக் பதிவு எண்ணை வைத்து அயனாவரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (21) என்பவரை கைது செய்தனர். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் நேற்றுமுன்தினம் கல்லூரி மாணவனை கைது செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.