சென்னை: சென்னை புறநகரான மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் கல்லூரிகளுக்கு இடையேயான சர்வதேச கணினி நிரலாக்க போட்டியை நடத்தியது. கடந்த 11ம் தேதி நடந்த தொடக்க விழாவில் டீன் சிவசெல்வன், நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் கணினி துறை தலைவர் மாசிலாமணி பங்கேற்றனர். இந்தியாவில் உள்ள சுமார் 90 உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து 260க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றார்கள். நிரலாக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறிப்பாக கோடிங், தீர்வுநெறி போன்ற தலைப்புகளில் நடந்த பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் சென்னை ஐஐடியின் மாணவர்கள் முதல் பரிசையும், சென்னை எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி 2ம் பரிசையும், டெல்லி ஐஐடி 2ம் பரிசையும் பெற்றனர். போட்டியில் தகுதி பெறும் கல்லூரியின் குழுக்கள் மேற்காசிய மண்டல போட்டிகளில் பங்கேற்பார்கள்.