திருத்தணி: ஆடிக்கிருத்திகை விழா முன்னிட்டு அவசர நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் ரூ.40 லட்சம் நிதி ஓதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், ஆடிக்கிருத்திகை விழா ஒட்டி அவசர நகர்மன்ற கவுன்சிலர்களின் கூட்டம் நேற்று தலைவர் சரஸ்வதிபூபதி தலைமையில் நடந்தது. இதில், ஆணையர் அருள் வரவேற்றார். துணை தலைவர் சாமிராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 18 கவுன்சிலர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில், வரும், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழாவில் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை வழிப்பட்டு செல்வர்.
எனவே, இந்த விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தற்காலிக குளியல் அறைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்துதல், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது, பக்தர்கள் ஒய்வு எடுப்பதற்கு பந்தல் அமைப்பது உள்ளிட்ட, பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கு, ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் விஜயகாமராஜ், பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.