சென்னை: சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென பற்றி எரிந்துள்ளது. சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சிக்னலுக்கு அருகே சொகுசு கார் சென்று கொண்டிருந்த போது திடீரென புகை ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது . இதனிடையே காரிலிருந்து ஓட்டுநர் இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அங்கு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும், குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பல லட்சம் மதிப்பிலான கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. காரில் யார் யார் பயணம் செய்து வந்தார்கள்? கார் எங்கிருந்து வந்தது போன்ற விவரங்களை குரோம்பேட்டை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த விபத்துக்கான முழுமையான விவரங்கள் தெரியப்படவில்லை எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் காரில் ஏற்பட்ட தீயை அணைத்து கொண்டிருக்கக்கூடிய பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. சொகுசு கார்களில் தீ பற்றி எரிவதற்கு முன்னதாக அறிவிப்பு வெளியாக கூடிய அனைத்து அம்சங்களும் இந்த காரில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த கார் தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.