மதுரை: கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொட்டகை முகூர்த்த விழா இன்று தொடங்கியது. அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த விழா இன்று மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் கொட்டகை முகூர்த்த விழா தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
12 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மீனாட்சி அம்மனுக்கு ஏப்ரல் 19ம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. 20ம் திக் விஜயமும், ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நாளான ஏப்ரல் 22ம் தேதி சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 23ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை செய்வார். இந்நிலையில் மண்டகப்படிகள் அமைப்பதற்கான முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த விழாவான இன்று பிற்பகல் 2 மணி அளவில் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது. இதனை கான திண்டுக்கல், தேனி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வர்.