புதுடெல்லி: சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்திற்காக பணம் பெற்றதாக பொய்யான வழக்கு பதியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் நியூஸ் கிளிக் நிறுவனர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக கூறி சீனாவை சேர்ந்த நபரிடம் இருந்து ரூ..75கோடியை பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீவிரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயாஸ்தா மற்றும் மனித வளத்துறை தலைவர் அமிர் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து இருவரது தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி துஷார் ராவ் கடேலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், சீனாவை சேர்ந்தவரிடம் இருந்து ரூ..75கோடி பெற்றதாக கூறப்படுவது பொய்யாகும்.
சீனாவில் இருந்து ஒரு பைசா கூட பெறப்படவில்லை. போலி வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி துஷார் ராவ் ஒத்திவைத்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் மீண்டும் காவலில் வைப்பது நீதிமன்றத்தின் உத்தரவுக்குட்பட்டது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.