சேலம்: சேலத்தில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக 7வயது சிறுமி, மூன்றாம் கண் யோகா மூலம் உலக சாதனை படைத்தார். சேலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் சேலத்தை சேர்ந்த கோகுல்குமார்-மிருளாதேவி தம்பதியினரின் மகள் அகமகிழ்தினி (7) கண்களை கட்டிக் கொண்டு பொருட்களின் வண்ணம் சொல்லும் சாதனை நிகழ்த்தினார். சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் கலந்துகொண்டு, சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இதில், சிறுமி அகமகிழ்தினி, துரோனா மூன்றாம் கண் யோகா மூலம் கண்ணை கட்டிக்கொண்டு, 581 பொருட்களின் வண்ணத்தினை 46 நிமிடத்தில் கூறி ஆச்சரியப்படுத்தினார். மேலும் பிற பொருட்களின் பெயர் மற்றும் வடிவங்களை கூறி சாதனை படைத்தார். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை, வின்னர்ஸ் புக்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இதில், மண்டலக்குழு தலைவர் தனசேகர், பகுதி செயலாளர் மணமேடு மோகன், கவுன்சிலர் இந்துஜா அருண், டாக்டர் ராம்குமார், அருள்முருகன், தனியார் பள்ளி முதல்வர் பால்பிரின்சிஸ் சேவியர், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.