ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மாணவி, தனது தாயுடன் நேற்று ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்தனர். எஸ்பி தங்கதுரையிடம் மாணவியின் தாய் கூறுகையில், ‘‘எனது கணவர் குடித்துவிட்டு வந்து தொந்தரவு செய்கிறார். மேலும் பிளஸ் 1 படிக்கும் மகளின் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு 34 வயதுக்காரரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். அப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், எனது மகளை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனது மகளை தொடர்ந்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார். இதேபோல் அந்த மாணவியும் புகார் கூறினார். இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில், மாணவியை தொடர்ந்து படிக்க வைக்கவும், தற்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.