ஆவடி: ஆவடி அடுத்து அயப்பாக்கம், டோனா கேலா கேம்ப் பிரதான சாலையை சேர்ந்தவர் சிவச்சந்திரன்(29). இவர் பிரின்டிங் மிஷின் சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் யஸ்விதா(2). இந்த, குழந்தை கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அம்பத்தூரில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு, குழந்தைக்கு டைபாய்டு இருப்பது தெரியவந்தது.
இதனை தொடந்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்றுமுன்தினம் குழந்தை சோர்வாக இருந்துள்ளது. பின்னர், அன்றிரவே, அம்பத்தூரில் உள்ள ஸ்டெட்போர்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.