Tuesday, April 30, 2024
Home » முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ சமுதாயத்தின் நலன் காக்கும் கவசமாக திமுக அரசு திகழ்கிறது: திமுக அறிக்கை

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ சமுதாயத்தின் நலன் காக்கும் கவசமாக திமுக அரசு திகழ்கிறது: திமுக அறிக்கை

by Karthik Yash

சென்னை: மீனவ சமுதாயத்தின் நலன் காக்கும் அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விளங்குவதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: 1989ல் மீனவ சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து மீனவ சமுதாய இளைஞர்கள் உயர் கல்வி கற்று வேலை வாய்ப்புகள் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. நான் பிரதமரானால் தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பேன் என்றார் மோடி. அவர் சொல்லி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது தாக்கப்பட்டதைவிட 10 ஆண்டு காலத்தில் மீனவர்கள் அதிகமாக தாக்கப்பட்டு, அவர்கள் உடைமைகள் எல்லாம் சிறைபிடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தில் ஒருவார்த்தை கூட இலங்கையைக் கண்டித்து, தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்கவில்லை பிரதமர் மோடி. ஆனால் மீனவ சமுதாயத்தின் நலன் காப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, எப்போதும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2021ல் ஆட்சிப் பெறுப்பேற்ற பிறகு இந்த அரசு மீனவர் நலன்களுக்காக நிறைவேற்றிய முக்கியமான பணிகள் சில:
* மீன்பிடிக்கச் சென்று இலங்கை அரசால் பிடிக்கப்பட்டு பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 129 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் 26 நாட்டு படகு உரிமையாளர்களுக்கு ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.6 கோடியே 84 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
* மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.250 என்பது ரூ.350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* காப்பீடு இல்லாத காலத்தில் மீன் பிடிக்க சென்று உயிர் இழந்த 205 மீனவர் குடும்பங்களுக்கு விபத்து காப்பீடு நிவாரணத் தொகை ரூ.2 லட்சம் வீதம் 172 மீனவர்களின் குடும்பங்களுக்கும், நிரந்தர ஊனமடைந்த ஒரு மீனவருக்கு ரூ.1 லட்சமும் ஆக ரூ.3 கோடியே 45 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
* இந்தோனேசிய கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு 2022ல் சிறையில் மரணமடைந்த குமரி மாவட்ட மீனவர் ஜெசின்தாஸ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.
* மஸ்கட்டில் ஆழ்கடலில் மீன்பிடித்தபொழுது கடலில் தவறி விழுந்து மரணமடைந்த குமரி மாவட்ட ஏழுதேசம் கிராமத்தை சேர்ந்த லிறன்ஷோ குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.
* தமிழ்நாடு மீனவ இளைஞர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான 6 மாத சிறப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து ரூ.93 ஆயிரம் செலவில் 26 மீனவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
* 2021ல் இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுவரை 3 ஆண்டுகளில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 230 மீனவ குடும்பங்களுக்கு ரூ.258 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
* மீன்பிடி குறைவு காலத்திற்கான சிறப்பு உதவி தொகை ரூ.5 ஆயிரம் என்பது ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு 5 லட்சத்து 51 ஆயிரத்து 609 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.331 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூ. 191 கோடியே 6 லட்சத்து 92 ஆயிரம் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
* பாரம்பரிய மீன்பிடிக் கலன்களை இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் 3,591 வெளிப் பொருத்தும் இயந்திரங்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
* திருவள்ளூர் மாவட்டம் அரங்கங்குப்பம், கூனங்குப்பம் , தாழங்குப்பம், நெட்டுகுப்பம் , குமரி மாவட்டம் குளைச்சல் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றை தூர் வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகள் ரூ.30 கோடி செலவில் நடைபெற்று
வருகின்றன.
* குமரி மாவட்டம் விவேகானந்தர் பாறை படகு நிறுத்தம் முனையத்தில் கூடுதல் படகு அனையும் தளம் அமைக்கும் பணி ரூ.7 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.
* ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.20 லட்சம் செலவில் ஆய்வு பணிகளும் பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.20 லட்சம் செலவில் ஆய்வுப்பணிகள் குந்தக்கால் மீன் இறங்கு தளத்தில் அலைத் தடுப்பு சுவர் அமைக்க ரூ.50 லட்சம் செலவில் ஆய்வு பணிகள் என மொத்தம் ரூ.90 லட்சம் செலவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
* தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் வரி விலக்க அளிக்கப்பட்ட ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 556 கிலோ லிட்டர் உயர் வேக டீசல் எரி எண்ணெய் , மானிய விலையில் 3,647 கடல் மீனவர்களுக்கு 19,869 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
* 2,404 நாட்டு படகுகளுக்கு 14 மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் மூலம் 19 ஆயிரத்து 320 கிலோ லிட்டர் மண்ணென்ணெய் ரூ.95 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
* 4,348 மீன்படி விசைப்படகுகளுக்கு 762 நாட்டு படகுகளுக்கும் மொத்தம் 67,917 கிலோ லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் மூலம் 12,312 நல வாரிய உறுப்பினர்களுக்கு 16 கோடியே 9 இலட்சம் ரூபாய் உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
* 1975ல் மீனவர்களுக்கு வீட்டுவசதித் திட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க. அரசு அத்திட்டத்திற்கு மீனவர்குல மாமேதை சிங்காரவேலர் வீட்டுவசதித்திட்டம் என பெயர் சூட்டிப் பெருமைபடுத்தியது.
* சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என பெயர் சூட்டி அதன் முகப்பில் சிங்காரவேலருக்குச் சிலை அமைத்து சிறப்புகள் செய்துள்ளது. இப்படி மீனவச் சமுதாயத்திற்கு என்றும் நலன் காக்கும் கவசமாக திகழ்கிறது தி.மு.க. அரசு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மீனவர்களை சுட்டு கொன்ற அ.திமு.க போல் அல்லாமல் – மீனவர்களை காப்பேன் என்று வாய்ஜாலாம் காட்டிய மோடியை போல் அல்லாமல், மீனவ சமுதாயத்தின் நலன் காப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, எப்போதும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

You may also like

Leave a Comment

ten − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi