மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த கடுவங்குடியில் சீதளா மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மகோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படும். விழாவில் தேரை பக்தர்கள் தங்களது தோளில் சுமந்து செல்வது தனி சிறப்பாகும். அதன்படி நடப்பாண்டு சித்திரை உற்சவ விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி உள்வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வாக தேர் பவனி நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து பக்தர்கள் தங்களது தோளில் தூக்கி கொண்டு ஊர்வலமாக வந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.