Wednesday, May 15, 2024
Home » முதல்வர் ஸ்பெயின் பயணம் மூலம் உயர்தரமான வேலைவாய்ப்புகள் தமிழ்நாடு முழுவதும் வர வாய்ப்பு: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

முதல்வர் ஸ்பெயின் பயணம் மூலம் உயர்தரமான வேலைவாய்ப்புகள் தமிழ்நாடு முழுவதும் வர வாய்ப்பு: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

by Karthik Yash

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணம் மூலம் உயர்தரமான வேலைவாய்ப்புகள் பல்லாயிரக்கணக்கில் தமிழகம் முழுவதும் வர வாய்ப்புள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். முதல்வருடன் ஸ்பெயின் நாட்டுக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்று இருந்தார். அங்கிருந்து நேற்று சென்னை திரும்பிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தொழில்துறை இதுவரை வரலாறு காணாத வளர்ச்சியை கண்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்த்து கொண்டு உள்ளார். முதலில் ஐக்கிய அரபு நாடுகள், அதன்பிறகு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றார். தற்போது வெற்றிகரமாக ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்து வந்துள்ளார். ரூ.3440 கோடி ரூபாய் முதலீடுகள் ஸ்பெயின் பயணம் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது.

எடிபான் நிறுவனம் 540 கோடி ரூபாய்க்கும், ரோக்கோ நிறுவனம் ரூ.400 கோடிக்கும் முதலீடு செய்ய உள்ளனர். இதுமட்டுமன்றி ஹப்க் லாய்டு நிறுவனம் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. ஹபக் லாய்டு முதலீடுகள் தமிழகம் முழுவதும் வர உள்ளது. எடிபான் நிறுவனம் சென்டர் ஆப் எக்சலன்ஸ் ஒன்றை அமைக்க உள்ளது. அதில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதனை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் அறிவிப்பார். படித்த இளைஞர்களுக்கும், நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கான சிறப்பான அறிவிப்பு அதில் உள்ளது.

உயர்தர அளவிலான பல்லாயிரகணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகம் முழுவதும் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் எந்த அளவுக்கு நடைமுறைக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வர் ஜப்பான் சென்று வந்தவுடன், ஜப்பான் நிறுவனம் தமிழகத்தில் பணியை துவங்கி விட்டது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் பல திட்டங்கள் இந்த மாதமே துவங்க உள்ளன. அதில் 70 சதவிதத்திற்கு மேல் நடைமுறைக்கு கொண்டுவர வாய்ப்பு உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு அனைத்தும் முதலீடுகளாக மாறி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

sixteen + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi