சென்னை : ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் தீரன் சின்னமலை என்று முதல்வர்
மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கிலேயரை துணிச்சலுடன் எதிர்த்து போரிட்ட விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்று தீரன் சின்னமலையின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய இணையற்ற போராளி! சமூக ஒற்றுமையின் சின்னம்! ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின் ஒப்பற்ற உரிமை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, அநியாய வரியைப் பறித்து மக்களுக்கு அளித்த சின்னமலை அவர்களின் பிறந்தநாளில், #INDIA-வைக் காக்க உறுதியேற்போம்! என்று குறிப்பிட்டுள்ளார் .