மாட்ரிட்: ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்பட்டார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27-ம் தேதி மேட்ரிட் சென்றார். ஸ்பெயினில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். பிரபலமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் அபர்ட்டி நிறுவன அதிகாரியுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடு செய்ய அபர்ட்டிஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உறுதி அளித்தது. ஆக்சியானா, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர், ஸ்பெயினில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. தனது பயணத்தின்போது ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடினார். சென்னை திரும்பும் முதலமைச்சர் காலை 8 மணிக்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.