புதுச்சேரி: சட்டவிரோதமாக பேனர் வைத்தததால் 2 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தான் பொறுப்பு என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுவை முன்னாளர் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில் இரண்டரை ஆண்டுகளாக பேனர் கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது. தடைச்சட்டம் அமலில் உள்ளது. அதனை அமல்படுத்தாமல் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
புதுச்சேரி முழுவதும் சிக்னல்களை மறைத்து பேனர் வைத்ததால், பைக் மீது லாரி மோதி நடராஜன், முருகன் ஆகிய 2 அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளது. இதற்கு முதல்வரும், உள்துறை அமைச்சரும் பொறுப்பேற்று, ராஜினாமா செய்ய வேண்டும். பேனர் வைத்தது தவறு, அதனை கிழித்ததாக சிறுவர்கள் மீது வழக்கு போட்டு சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் பொது நல வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அதில் பேனர் தடை சட்டத்தை மீறியோருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றார்.