Saturday, June 1, 2024
Home » சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வேனில் பயங்கர தீ விபத்து; ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 14 மாணவர்கள்..!!

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வேனில் பயங்கர தீ விபத்து; ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 14 மாணவர்கள்..!!

by Kalaivani Saravanan

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளி பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே துணிச்சலமேடு கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த பள்ளியில் சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்களை வீடுகளில் இருந்து அழைத்து வருவதற்காக ஏராளமான பேருந்து மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளி நிர்வாகத்தால் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு சொந்தமான வேனில் அழைத்து செல்வது வழக்கம். இன்றும் வழக்கம்போல் 14 மாணவர்களை அழைத்துக்கொண்டு அந்த வேன் சிதம்பரத்தை நோக்கி வந்துள்ளது. தீர்த்தாம்பாளையம் என்ற பகுதியில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது வாகனத்தில் திடீரென புகை வந்துள்ளது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட வேன் ஓட்டுநர் முருகன், வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மாணவர்களை கீழே இறக்கியுள்ளார். சிறிது நேரத்திலேயே பள்ளி வேன் முழுவதுமாக தீ பிடித்து எரிய தொடங்கி கரும்புகை வானுயர பரவியது.

அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்ட போதும் முடியாத காரணத்தினால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பள்ளி வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால், 14 மாணவர்கள் பாதிப்பு ஏதுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

You may also like

Leave a Comment

20 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi