Tuesday, April 30, 2024
Home » சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29 நக்சல்கள் சுட்டுக் கொலை: 3 வீரர்கள் காயம்

சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29 நக்சல்கள் சுட்டுக் கொலை: 3 வீரர்கள் காயம்

by Karthik Yash

கான்கேர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 29 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர், 2 போலீசார் உட்பட 3 பேர் காயமடைந்தனர். மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களுக்கு எதிரான சோதனையை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரப்படுத்தினர். நக்சலைட் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2ம் தேதி பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி என்கவுன்டர் நடத்தினர். அதில் 16 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, நக்சல் பாதிப்பு நிறைந்த பஸ்தார் மக்களவை தொகுதியில் நாளை மறுதினம் முதல்கட்ட மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், கான்கேர் மாவட்டத்தில் பினாகுண்டா மற்றும் கொரோனார் கிராமங்களுக்கு இடைப்பட்ட ஹபதோலா வனப்பகுதியில் வடக்கு பஸ்தார் நக்சல் பிரிவைச் சேர்ந்த முக்கிய நக்சலைட்கள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்கு மதியம் 2 மணி அளவில் சென்றனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள் துப்பாக்கியால் சுட்டதால் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் 29 நக்சலைட்கள் கொல்லப்பட்டிருப்பதாக நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் கூறி உள்ளார். மேலும், பாதுகாப்பு படை வீரர் ஒருவர், 2 போலீசார் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘‘காயமடைந்த வீரரின் காலில் தோட்டா பாய்ந்தது. அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி உள்ளார். காயமடைந்த 3 வீரர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 29 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், ஏகே 47, எஸ்எல்ஆர், இன்சாஸ் மற்றும் .303 ரைபிள்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றார். இந்த ஆண்டு இதுவரை கான்கேர் உட்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 79 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

eleven − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi