சென்னை: சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போடக்கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டின் முதன்மைக் கட்டமைப்புத் திட்டமான விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்தக் காரணமும் தடையாக இருக்கக்கூடாது.
கிளாம்பாக்கம் – விமானநிலையம் இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2021-ஆம் ஆண்டே தயாராகி விட்டது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதற்கு ஓராண்டிற்கு மேல் ஆனது. மொத்தம் ரூ.4080 கோடி தேவைப்படும் 15.30 கி.மீ நீளம் கொண்ட இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தான் முழுமையாக நிதி வழங்க வேண்டும். ஏற்கனவே ரூ.61,843 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்காததால், அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.10000 கோடியை தமிழக அரசே ஒதுக்கி வருவதாகவும், இத்தகைய சூழலில் கிளாம்பாக்கம் – விமான நிலையம் திட்டத்திற்கும் நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் மிக முக்கியமான திட்டம் ஆகும். இத்திட்டத்தை செயல்படுத்த நிதி தடையாக இருக்கக் கூடாது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் நிதி கோரி 2 ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் ஒன்றிய அரசு அதன் பங்கு நிதியை வழங்க வேண்டும். தமிழக அரசும் பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் நிதியுதவி பெற்றாவது விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.