சென்னை: இரவு ரோந்து பணியில் ஈடுபடும்போது பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஐசக் தெருவில் பெண் காவலர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: இந்த இல்லத்தில் 21 அறைகள் உள்ளன. 57 பெண் காவலர்கள் தங்கும் வசதி உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் பெண் காவலர்கள் ரூ.100 கொடுத்து இந்த அறையை பயன்படுத்தலாம். சென்னை ஒரு பாதுகாப்பு நகரம். இரவு நேரத்தில் ரோந்து செல்லும் பெண் காவலர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை. காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு காவலர்கள் இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் பட்டியல் வரும் 31ம் தேதி வெளியிடப்படும். போதை மாத்திரைகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக வழக்குகளும் பதிவாகியுள்ளன. போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் சென்னை காவல் துறை பின் வாங்காது.
சென்னை பாதுகாப்பான நகரம் பெண் போலீசாருக்கு துப்பாக்கி தேவையில்லை: கமிஷனர் ரத்தோர் பேட்டி
previous post