சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 சர்வதேச விமானங்கள் உட்பட 22 விமானங்கள் புறப்படுவதில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக, பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் மழை விட்டு விட்டு பெய்து வருவதன் காரணமாக அதிகாலை வரை சென்னை விமான நிலையத்தில் விமானிகள், விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் ஆகியோர் வருவது தாமதம் ஏற்படுகிறது.
அதேபோல் சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை விமானங்களில் ஏற்றுவதினாலும் தாமதம் ஏற்படுகிறது. சென்னையிலிருந்து இலங்கை, சிங்கப்பூர், குவைத், துபாய், ஷார்ஜா உள்ளிட்ட 12 சர்வதேச விமானங்களும், திருவனந்தபுரம், டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட 10 உள்நாட்டு விமானங்களும் சுமார் 15 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரம் வரை கால தாமதம் ஏற்படுகிறது.
இன்று அதிகாலை தூத்துக்குடி செல்லக்கூடிய விமானமும், தூத்துக்குடியில் இருந்து வரக்கூடிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வரத்தும் குறைவாக உள்ளதால் மேலும் சில விமானங்கள் ரத்து செய்ய நேரிடலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.