![](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/04/55-2.jpg?type=webp&quality=80)
சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பழைய பகுதி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தாஸ்(59) விவசாயி. இவரது மகன்கள் தன்ராஜ்(30), தங்கராஜ்(27). மகள் தனம்(38). 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் தங்கராஜ், மனைவி திவ்யாவுடன் அதே ஊரில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். தற்போது சென்னையில் பிளம்பர் வேலை செய்து வருகிறார். தந்தை தாசுக்கும், மகன் தங்கராஜிக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அவ்வப்போது குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை தங்கராஜ், தந்தையின் வீட்டிற்கு வந்தார். அப்போது, அங்கிருந்த தந்தை தாஸ், ‘இங்கே எதற்காக வந்தாய்? எனக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தந்தை, மகன் இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதில் தங்கராஜ் பலமாக தாக்கியதில் தாஸ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இதுகுறித்து தாஸ் மனைவி தவமணி சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.