சென்னை: திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயில் பெட்டியில் திடீரென கரும்புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மதுரையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலையில் ரயில் பெட்டி தீப்பிடித்தது. அதில் 9 பேர் பலியாகினர். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு சம்பவம் அம்பத்தூரில் நடந்து விட்டது. திருவள்ளூரில் இருந்து ஆவடி வழியாக நேற்று காலை 7.45 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி ஒரு புறநகர் மின்சார ரயில் வந்தது. இந்த ரயில் ஆவடியில் இருந்து கொரட்டூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வில்லிவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
கொரட்டூர் – வில்லிவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரெயில் வந்தபோது ஒரு பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் நின்றது. இதையடுத்து கரும்புகை வெளியேறிய ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அலறியடித்து நடைமேடையில் இறங்கி ஓடினர். அந்த பெட்டியில் இருந்த வயதானவர்கள், பெண்கள், சிறுவர்கள் இறங்க முடியாமல் சிக்கி சிரமம் அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கரும்புகை வந்த ரெயில் பெட்டியை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த ரெயில் பெட்டி மட்டும் தனியாக கழற்றப்பட்டு ஆவடி பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . சுமார் அரை மணி நேர தாமதத்துக்கு பின்னர் அந்த மின்சார ரெயில் மீண்டும் சென்ட்ரல் நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதன்காரணமாக சென்னை மார்க்கமாக வந்த மின்சார ரெயில்கள் வரும்வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் மின்சார ரெயில்களில் இருந்து இறங்கி பஸ், ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.
சென்னை – திருவள்ளூர் மார்க்கத்தில் மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை வழக்கம்போல் இருந்தது. மின்சார ரெயில் பெட்டியில் கரும்புகை வெளியேறியதால் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து பெரம்பூர் ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, மின்சார ரெயில்கள் வேகமாக செல்லும் போது பிரேக் அழுத்தினால் இது போன்று கரும்புகை வெளிவரும். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ரெயில் பெட்டியில் வழக்கத்திற்கு மாறாக கரும்புகை சற்று அதிகமாக வெளியேறியது. இதனால் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றனர்.