சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே சாலையோர காய்கறி கடை நடத்தி வருபவர் மணி. இவரது கடைக்கு வந்த 2 பேர் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றனர். இது குறித்து தகவலறிந்து நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரை கைது செய்தனர். விசாரணையில், கைதானவர்கள் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர் சுப்பிரமணியன் என்பதும், பள்ளிக்கரணையை சேர்ந்த 64 வயது முதியவர் அண்ணாமலை என்பதும் தெரியவந்தது.
இதில் சுப்பிரமணியன் வழக்கறிஞர் என்பதும், அண்ணாமலை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடமிருந்து ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகள், கட்டிங் மிஷின், ரூபாய் நோட்டுகளை எண்ணும் மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் ரூ.45 லட்சம் கள்ள நோட்டுகளை அச்சடித்து வைத்து கடந்த 5 மாதங்களாக சுமார் ரூ.4 லட்சம் பணத்தை பல்வேறு இடங்களில் விநியோகித்தது தெரியவந்தது. பின்னர் கள்ள நோட்டுகளை பிரிண்டிங் செய்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.
கள்ள நோட்டுகளை விநியோகித்த ராணுவ வீரர் அண்ணாமலை, வழக்கறிஞர் சுப்பிரமணியன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு கள்ள நோட்டுகள் விவகாரம் என்பதால் இந்த வழக்கின் தன்மையை கருதி தற்போது வழக்கு நுங்கம்பாக்கம் போலீசாரிடம் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகள் விவகாரம் குறித்து விசாரணை அதிகாரி இது தொடர்பாக விசாரணையை தீவிரமாக தொடங்கி இருக்கிறார்.