Saturday, May 18, 2024
Home » சென்னை வந்த மலேசிய விமானத்தில் ஆடைக்குள் மறைத்து கடத்திய 3 கிலோ தங்கப்பசை பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை வந்த மலேசிய விமானத்தில் ஆடைக்குள் மறைத்து கடத்திய 3 கிலோ தங்கப்பசை பறிமுதல்: 2 பேர் கைது

by MuthuKumar

மீனம்பாக்கம்: மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த ₹1.75 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கப் பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்த 2 பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வரும் விமானத்தில் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்த 2 பேர் அதிகளவிலான தங்கம் கடத்தி வருவதாக நேற்று சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறையின் தனிப்படையினர் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கையில் இருந்து விமானப் பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஒரு தனியார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சுற்றுலா விசாவில் மலேசியா சென்று திரும்பிய 2 சென்னை பயணிகளின்மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர்.

இதைத் தொடர்ந்து 2 பேரையும் தனியறைக்கு கொண்டு சென்று, அவர்களை முழுமையாக சோதனை செய்தனர். இச்சோதனையில், இருவரின் கால்களில் அணிந்திருந்த ஆடைக்குள் தங்கப் பசையை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை தனித்தனியே பிரித்து பார்த்தபோது, அதற்குள் சர்வதேச அளவில் ₹1.75 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கப் பசையை மறைத்து கடத்தி வந்திருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியாகி பறிமுதல் செய்தனர்.

பின்னர் மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 2 சென்னை பயணிகளையும் கைது செய்தனர். அவர்களை சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனய்வு துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், சென்னையை சேர்ந்த 2 பேரும் சர்வதேச கடத்தல் கும்பலில் கூலிக்கு தங்கம் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி வருவதை தொழிலாக செய்து வந்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அந்த தங்கப் பசையை சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தனர், இவற்றை அவர்களிடம் மலேசியாவில் கொடுத்தவர்கள் யார் என பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

nineteen + 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi